ads header

Breaking News

வெண்குஷ்டத்தை விரட்டியடிக்கும் சித்தா..!

 

வெண்குஷ்டத்தை விரட்டியடிக்கும் சித்தா..!

 

வெண்குஷ்டத்தை விரட்டியடிக்கும் சித்தா ...!

 ரோக்கியம்தான் மிகப்பெரிய சொத்து என்பதை, நோயின் கையில் சிக்கி சித்ரவதைப்படும்போதுதான் புரிந்துகொள்ள முடியும். நோயாளியாக இருப்பது அந்த அளவுக்கு ஒரு நரக வேதனை.

உடல் உறுப்புகளில் கோளாறு என்றால், நாம் சொன்னால்தான் தெரியும் பிறருக்கு. ஆனால், தோல் நோய் பிரச்னையால் பாதிக்கப்படுவர்களின் நிலை பரிதாபத்திலும் பரிதாபம். 'நான் ஒரு நோயாளி' என்பதை பார்ப்பவர்களின் முதல் பார்வைக்கே 'பளிச்' எனக் காட்டிவிடும் தோல் நோய் பாதிப்பு. இதனால், பரிதாபம், பரிகாசம் என்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம்.

அவர்களையெல்லாம் பார்த்து, "கவலையே வேண்டாம். உங்கள் நோயைக் குணப்படுத்த நாங்களாச்சு'' என்று நம்பிக்கையூட்டுகிறார் மருத்துவர் தெ.வேலாயுதம். இவர், சென்னை, தாம்பரம் - சானடோரியத்தில் இயங்கி வரும் 'தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன'த்தில் உள்ள 'அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனை'யில் பணியாற்றி வருகிறார்.

மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனத்துக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகள், தங்கி சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உணவு உட்பட அனைத்தும் இலவசம். இங்கு அனைத்து தோல் வியாதிகள், முடக்குவாதம், மூட்டுவலி உள்ளிட்ட பல நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

''தோல் நோய்க்குச் சித்த மருத்துவத்தை விட்டால் வேறு சிறந்த மருத்துவம் இல்லை. ஆங்கில மருந்தில் இருக்கும் சில வேதிப் பொருட்கள், அதை நீண்ட நாள் சாப்பிட்டு வருபவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், சித்தாவில் உங்களின் ஆரோக்கியம் மட்டுமே உங்களிடம் மீட்டு அளிக்கப்படும். இலவச இணைப்பாக வேறு எந்த பக்க விளைவுகளும் இல்லை!'' என்று அடித்துச் சொல்கிறார் வேலாயுதம்.

குறிப்பாக, தோல் வியாதியிலேயே வீரியமாகக் கருதப்படுகிற, சிகிச்சைகளுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கிவிடாத 'வெண்குஷ்டம்' நோய்க்கு இங்கு வழங்கப்படும் சிகிச்சை, மிகவும் பிரபலம். ஆம்... இங்கு வரும் வெண் குஷ்ட நோயாளிகளில் 85% மேல் முழு குணம் பெற்று உள்ளனர் என்பது கவனத்துக்கு உரியது! அந்த வெண்குஷ்டம் நோய் பற்றி விளக்கமாகப் பேசினார் வேலாயுதம்.

"ஆங்கிலத்தில் 'லூக்கோடெர்மா' (Leucoderma) என்று வழங்கப்படும் இந்த நோய்க்கு தமிழில் வெண்புள்ளி, வெண்குட்டம், வெண்படை என்று பல பெயர்கள் உண்டு. சித்த மருத்துவத்தில் பதினெட்டு வகையான தோல்நோய்களில் ஒன்றாக இதைக் கருதுகிறோம்.


'பகர்பித்த விந்தையிலாது மேகம் வராது' என பதினெட்டு சித்தர்களில் ஒருவரான தேரையர் ஒரு பாட்டில் குறிப்பிடுகிறார். அதாவது, பித்தத்தின் ஆதிக்கம் இன்றி எந்த மேகநோயும் வராது என்று அர்த்தம். குறிப்பாக உடலில் உள்ள பிரகாச பித்தம் (ஒள்ளளித்தீ), வண்ணப்பித்தம் (வண்ண அழல்)... இந்த இரண்டின் குறைபாடு காரணமாக தோலில் வெண்புள்ளி தோன்றும். ஆங்கிலத்தில் இதை 'மெலனின் நிறமி குறைபாடு' என்பார்கள்.

இந்த நோய் ஆரம்பத்தில் சருமத்தில் சின்ன புள்ளிகள் போல் தோன்றும். சிலருக்கு புள்ளிகளில் அரிப்பு, தோல் வறட்சி, மரத்துப்போதல், கூடுதலான வியர்வை, முழு உணர்ச்சி இல்லாதது போன்ற குணங்கள் இருக்கும். சிலருக்கு இந்த குணங்களில் ஏதாவது ஒன்றிரண்டு குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருக்கும்.

இந்த வெண்குட்டம் நோய்க்கு வாத வெண்படை, பித்த வெண்படை, கபவெண்படை என மூன்று உட்பிரிவுகளும் உண்டு. வாத வெண்படை சிறிது சொரசொரப்பாக, சிவந்து வெளுத்திருக்கும். பித்த வெண்படை செந்தாமரை இதழ் போல் சிவந்து, வெளுப்பாகப் பரவும். பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சல் இருக்கும். முடி உதிரும். கப வெண்படை தும்பைப்பூப் போல் வெண்மையாக தடித்துப் பரவும். நமைச்சல் உணர்வு இருக்கும்'' என்று அறிகுறிகள் சொன்னவரிடம், இவற்றுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டோம்.

"இந்த வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு. இதுக்கு அடிப்படையான மூலிகைகள் கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை. இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் தருகிறோம். வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.

மருந்து சாப்பிடும்போது உணவில் பத்தியம் உண்டு. புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும். மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மீன், மாமிசம் தவிர்க்க வேண்டும். முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்'' என்றார்.

இந்த நோய் குறித்து தனியாக ஆய்வு நடத்தி முடித்திருக்கிறார் மருத்துவர் ஏ.சதீஷ்குமார். "பதின்மூன்று வயது வரையுள்ள குழந்தை நோயாளி களை ஆய்வு செய்ததில், அதில் மூன்று சதவிகிதத்தினருக்கு பெற்றோர் வழியாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அதிகம் வருகிறது'' என்ற சதீஷிடம்,

"பொதுவாக சித்த மருத்துகள் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் பிற்காலத்தில் பாதிப்பு வரும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே..?'' என்று கேட்டோம்.

வெண்குஷ்டத்தை விரட்டியடிக்கும் சித்தா ...!

"இது மிக தவறான ஒரு கருத்து'' என்று மறுத்தவர், "சித்த மருத்துவம், மூலிகைகளின் சுத்தி முறைகளைப் பற்றி தான் முதலில் வலியுறுத்துகிறது. பல மூலிகைகளுக்கு சுத்தி முறைகள் இருக்கின்றன. அதோடு மருந்து தயாரிப்பில் நட்புச் சரக்கு, பகைச் சரக்கு என கலவை விகிதாச்சார அளவுகள் உள்ளன. 

அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இந்த கணக்கீடுகளின் அடிப்படையில் கவனமுடன் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிக்கத் தேவையான குடுவை உள்ளிட்ட அனைத்துமே சுகாதாரமான முறையில் அங்கே பராமரிக்கப்படும். எனவே, நாங்கள் தரும் சித்த மருந்து களால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது'' என்றார்.

சரி, வெண்குஷ்டத்தை சித்த மருத்துவத்தால் குணப்படுத்துகிறோம் என்று இவர்கள் சொல்வது எந்த அளவுக்கு உண்மை?

தொடர் சிகிச்சைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து தன் மகளை அழைத்து வந்திருந்த ஆனந்தன், "பத்து வயசுல, என் மகளுக்கு காலுல சிறு புள்ளியா ஆரம்பிச்சுது. முதல்ல இங்கிலீசு வைத்தியம்தான் பார்த்தோம். அந்த மருந்து சாப்பிட, சாப்பிட குறையறதுக்குப் பதிலா, உடம்பு முழுவதும் பரவ ஆரம்பிச்சிடுச்சி. ரெண்டு லட்ச ரூபா செலவானதுதான் மிச்சம். இங்க இலவசமா மருந்து கொடுக்கறாங்க. ரெண்டு வருஷமா அதைச் சாப்பிட்டு நல்ல குணம் தெரியுது. முகம், தலை எல்லாம் முழுசா மாறிடுச்சு.

 பக்கவிளைவெல்லாம் எதுவும் இல்ல. செலவும் கிடையாது. நாங்க இந்த ஆஸ்பத்திரியை கோயிலா பாக்குறோம்'' என்றார் நன்றிப் பெருக்கோடு.

கேரளாவில் இருந்து இங்கே வந்து கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை எடுத்துவரும் சல்மான், "பல இடங்கள்ல சிகிச்சை எடுத்தும் குறையல. இங்க வந்தபிறகு நல்ல முன்னேற்றம். குணமாயிடுவேன்கிற நம்பிக்கை வந்துடுச்சு சார்!'' என்றார் கண்கள் ஒளிர.

ஆக... புற அழகை பாதிக்கும் வெண்குஷ்டம் நோயால் மன உளைச்சல் அடைந்து, வாழ்நாள் முழுவதும் தாழ்வு மனப்பான்மையோடு கடக்கத் தேவையில்லை. நோயாளிகளைக் குணப்படுத்த சித்த மருந்துவம் காத்திருக்கிறது!

- யாணன்

நன்றி: ஆனந்த விகடன் 

சித்த மருத்துவம் என்றால் என்ன?

திருமூலர், போகர் போன்ற தமிழ் சித்தர்களால் வழங்கப்பட்டதுதான், சித்த மருத்துவம். இதை தமிழ் மருத்துவம் என்றும் கூறுவதுண்டு.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய்க்கு இந்த மூலிகை எனவும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் எனவும் சித்தர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

உதாரணமாக மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லியை அன்றே குறிப்பிட்டுள்ளனர். இதை ஆங்கில மருத்துவம் இப்போது ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments